வியாழன், 23 டிசம்பர், 2021

பரிமாணங்களின் தூரம்

ஒரு வட்டத்திற்கு

இரண்டு பரிமாணங்கள்

மூன்றாம் பரிமாணமொன்று வரைய

நீள் வட்டப் பாதையில்

ஒரு கோளம்

ஒரு கோளத்தைச் 

சுற்றுகிறது,


யுகங்களின் தூரத்தில்

கோளம் ஒரு வட்டமாக இருந்தது,

இன்னுமின்னும் யுகங்களின் தூரத்தில்

வட்டம் ஒரு புள்ளியாக இருந்தது.

புள்ளிகளின்றி வேறெதை வியந்திருக்கிறோம்

நிறையிழந்து வெடித்த புள்ளி

வெளியின் ரூபங்களில் எதிரொளிக்க

காண்கின்றன கண்கள்,

அந்தொரு புள்ளி

ஒரு நிலவு,

ஒரு பூமி,

ஒரு நட்சத்திரம்,

வெறும் ஒரு புள்ளி,

இறுதியில்...


***



யாருக்கு தெரியும்

பிரபஞ்சத்தின் முதல் பக்கத்தை,

இரண்டு பக்கங்கள் தள்ளி சொற்கள் 

பேசிக் கொண்டிருந்தன


நிலா, சூரியன்

நட்சத்திரக் கூட்டங்களும்

பூமியைச் சுற்றிவர

நெடுங்காலமாகப் பிரபஞ்சத்தை

ஆமைகள் சுமந்திருந்தன,

நிறை தாங்காத ஆமைகள் சரிந்த நாளில்

சூரியன் ஒரு நட்சத்திரமானது,

நட்சத்திரங்கள் நகரத் தொடங்கின,

பூமியும் சூரியனைச் சுற்றச் சென்றது

எல்லாம் மாறிப் போக

இந்த நிலவு மட்டும்

இன்னும் பூமியையே

சுற்றுகிறது. 

ஞாயிறு, 3 அக்டோபர், 2021

கானல்நீர்

 

தினம் தினம் 
நாளின் மாலை மீதேறி
பட்டியடைகிறது
ஒரு கிடாய்

அன்றாடங்களின் பாதையில்
வடக்குத்தெரு முக்கு திருப்பியதும்
கருவேலமரக் காய்கள்
மறந்ததேயில்லை
எந்நாளும்,
அல்லிக்குட்டையைத் தாண்டி
ஆலமர நிழலிலிருந்து விரியத்தொடங்கும் 
கிடாயின் மத்தியானங்களில்
புற்களின் நுனி
செடி கொடிகளின் இலைகளென
நேற்றுச்சென்ற இடங்களுக்கு
இன்று செல்வதில்லை
இருந்தும் அறுகம்புற்கள் திசையில்
மட்டும் தொலைந்தே போகிறது,
இரவுகளைப் பட்டியில் வைத்தே 
பார்த்துப்பழகிய கிடாய்க்கு
பட்டியின் நீள அகலமே இரவினெல்லை,
அன்றொரு மாலை 
திசைகளிழந்த கிடாய்க்கு
இரவே நீள அகலப் பட்டியானது
தொலைந்த சரிவின் இறக்கத்திலிருந்து
மெள்ள இரவு விலகி விடிகையில்
பட்டியடைந்த கிடாய்க்கு
தரை முழுதும் பூத்துக்கிடந்தன 
அறுகம்புற்கள்.

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2021

ஞாபகப்பிழைகள்

 


நீர் வெளியேறிய 

படிமங்களின் துகள்களை

ஒளிகற்கள் என்றாய்,

சுண்ணாம்பு பாறைகளில்

நுணா பழங்களைத் தேடியலைந்து

ஏதுமில்லாத ஒரு நாளில்

ஒளியின் வெளிச்சத்தை விழுங்குகிற

கிரகண புள்ளிகளை விரட்ட 

யாரோயெறிந்த 

சுண்ணாம்புக் கற்கள் தான் 

நட்சத்திரங்கள் என்றாய்,

கானகத்தை மௌனமென்றாய்,

கிளைகள் பூக்களின் வேர்களென்றாய்,

சுனையின் மறைபொருளைத்

திரும்பத் திரும்ப 

நீயே கற்றுத்தந்தாய்,

யுகயிரவுகள் கடந்து 

ஆகாசநீலத்திற்குக் கேட்க 

ஞாபகங்களைக் கூறினோம்

ஒவ்வொரு நாளின் வழியெங்கும்

புற்றீசல் சிறகுகளாக

நினைவின் ஞாபகப்பிழைகள் மட்டும்

பிய்ந்து கிடக்கின்றன...


   

நினைவூட்ட

  காலச்செறிவின்  பாழ்நில வெளியெங்கும்  பிறக்கவிருக்கிறது ஒரு கானகம், மணற் குடுவைகளில் குவியல் குவியலாகச் சரிகின்ற  மணலும் வெளியும் எதிலெதை ந...