தினம் தினம்
நாளின் மாலை மீதேறி
பட்டியடைகிறது
ஒரு கிடாய்
அன்றாடங்களின் பாதையில்
வடக்குத்தெரு முக்கு திருப்பியதும்
கருவேலமரக் காய்கள்
மறந்ததேயில்லை
எந்நாளும்,
அல்லிக்குட்டையைத் தாண்டி
ஆலமர நிழலிலிருந்து விரியத்தொடங்கும்
கிடாயின் மத்தியானங்களில்
புற்களின் நுனி
செடி கொடிகளின் இலைகளென
நேற்றுச்சென்ற இடங்களுக்கு
இன்று செல்வதில்லை
இருந்தும் அறுகம்புற்கள் திசையில்
மட்டும் தொலைந்தே போகிறது,
இரவுகளைப் பட்டியில் வைத்தே
பார்த்துப்பழகிய கிடாய்க்கு
பட்டியின் நீள அகலமே இரவினெல்லை,
அன்றொரு மாலை
திசைகளிழந்த கிடாய்க்கு
இரவே நீள அகலப் பட்டியானது
தொலைந்த சரிவின் இறக்கத்திலிருந்து
மெள்ள இரவு விலகி விடிகையில்
பட்டியடைந்த கிடாய்க்கு
தரை முழுதும் பூத்துக்கிடந்தன
அறுகம்புற்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக